Type Here to Get Search Results !

உடலை வலுவாக்கும், புற்றுநோயைத் தடுக்கும்... எக்கச்சக்க பலன்கள் தரும் 10 மூலிகை தோசைகள்!

பல வீடுகளில் தினமுமே இரவு உணவு, தோசை! `இன்னிக்கும் தோசைதானா?’ என்று எதிரொலிக்கும் குரல்களும் உண்டு. இது ஒரு புறம் இருக்கட்டும். இன்னொரு புறம், நெய்விட்டு முறுகலாக அம்மா சுட்டுத்தரும் தோசையை விரும்பாத குழந்தைகளே இருக்க முடியாது. தோசை, நம் பாரம்பர்ய உணவுகளில் ஒன்று. நாம் உண்ணும் அனைத்து உணவுகளுமே மருந்தாக முடியும்.  `மருந்து’ எனக் கருதும் மூலிகைகளை உணவுடன் கலந்து சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக் கிடைக்கும்; நோய்கள் வராமல் தடுக்கும். இப்படி நோயாளிக்கு உணவே மருந்தாகவும் மாறும். இதனால் நோயிலிருந்து எளிதாக விடுபடவும் முடியும். ஆயுர்வேதக் குறிப்புகளைக் கொண்டு, அதன்படி தோசை செய்வது அந்தக்கால நடைமுறை. அதற்கான குறிப்புகளும் காணப்படுகின்றன. அந்தக் காலத்தில், உடல் பலத்தைப் பெருக்குவதற்கும் ஆண்மையை விருத்தி செய்யவும் மருந்துகளை அரிசி மாவுடன் கலந்து, அடையாகச் செய்து பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

மூலிகை தோசை

உடலுக்கு வலு சேர்க்கும் மூலிகை தோசைகள்...

கல்யாண முருங்கை

முருங்கையை வீட்டுக்குப் பின்னாலும், கல்யாண முருங்கையை வீட்டுக்கு முன்னாலும் வளர்ப்பார்கள்.  பெண்மையைப் போற்றக்கூடிய மிகச் சிறந்த உணவு கல்யாண முருங்கை. இது, பெண்களுக்கான மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். மாதவிடாய் சுழற்சியைச் சீராக்கும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியைக் குறைக்கும். சினைப்பை கட்டி, சளித் தொந்தரவு போன்றவற்றைச் சரிசெய்யும். கர்ப்பப்பையை வலுவாக்கும். மேலும், கருமுட்டை வளர்ச்சிக்கு உதவும். ஆண்களுக்குச் சளியைக் குணப்படுத்தும். சைனஸ் மற்றும் தலைவலியைத் தீர்க்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளைக் கொல்லும். புளித்த ஏப்பத்தைச் சரிசெய்யும்.

இதை, தோசையாகவும் சாப்பிடலாம். நரம்புகள் நீக்கப்பட்ட இலைகளைத் தோசை மாவில் கலக்க வேண்டும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், சீரகம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து கரைத்து, தோசையாக ஊற்றிச் சாப்பிடலாம். இதை வாரம் ஒரு முறை சாப்பிடலாம். இரண்டு அல்லது மூன்று தோசை என அளவாக எடுத்துக்கொள்வது நல்லது.

முடக்கத்தான்

`முடக்கு வாதத்தை அறுத்தான்’ என்பதே முடக்கத்தான் என்பதன் பொருள். இது, மழைக் காலங்களில் வயல்களின் ஓரமாக வளரக்கூடியது. முடக்குவாதம் ஏற்படாமல் காக்கும். மூட்டுகளில் ஏற்படக்கூடிய வலி, வீக்கம் போன்றவற்றைச் சரிசெய்யும். முடக்கத்தானின் இலைச் சாற்றைத் தலையில் தடவி, சிறிது நேரம் கழித்துக் குளிக்கலாம். இது, வெயில் காலங்களில் வெளியில் செல்லும்போது தலையில் படியும் அழுக்கை நீக்கும். கூந்தலில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்கும்.

முடக்கத்தானை மாவுடன் சேர்த்து, தோசையாக ஊற்றிச் சாப்பிடலாம். மூன்றி ஒரு பங்கு என்ற விகிதத்தில் கலக்க வேண்டும். இதனால், செரிமானக் கோளாறு சரியாகும். எளிதில் ஜீரணமாகும்.


மணத்தக்காளி

பொதுவாக மணத்தக்காளி, `வயிற்றுப்புண்ணுக்கு நல்லது’ என்பார்கள். இது, வீட்டில் வளர்க்கக்கூடிய செடி. இதன் பழம், பூ, இலை, தண்டு... அனைத்தையும் உணவாகப் பயன்படுத்தலாம். இது ஒரு சிறந்த மலமிளக்கியாகச் செயல்படும். இதில் இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. மணத்தக்காளிக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், சருமம் பொலிவு பெறும். இதயம் பலமடையும். குடல் புண்களைச் சரிசெய்யும்.

மணத்தக்காளிக்கீரையை நரம்பு நீக்கி, இலைகளை மட்டும் 1:3 என்ற விகிதத்தில் மாவுடன் சேர்த்து, தோசையாக ஊற்றிச் சாப்பிடலாம். இதனால் தொண்டைக் கமறல், தொண்டைப் புண், வாய்ப் புண், தொண்டையில் ஏற்படும் புளித்த ஏப்பம் மற்றும் தொண்டைக் கரகரப்பு போன்றவை சரியாகும்.

சிறுகீரை

சிறுகீரையின் தண்டு மற்றும் இலைகள் பெரிதாக இருக்கும். அதிக அளவு நீர்ச்சத்து, கலோரி நிறைந்த கீரை இது. கிட்டத்தட்ட சரிவிகித உணவைப்போல சரிவிகிதக் கீரை, சிறுகீரை. கண் எரிச்சலைப் போக்கும். கண்களில் ஏற்படும் கட்டியைக் குணப்படுத்தும். கல்லீரலை வலுப்படுத்தும்.

சிறுகீரையின் தண்டு மற்றும் இலையைப் பொடியாக நறுக்கி, மாவுடன் கலந்து தோசையாகச் சாப்பிடலாம். இது, சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் கோளாறுகளைச் சரிசெய்யும். வயிற்று எரிச்சல், அடிவயிற்றுவலி போன்றவற்றைச் சரியாக்கும். சிறுநீரைப் பெருக்கும். மலச்சிக்கலைச் சரியாக்கும். ரத்த உற்பத்தியைப் பெருக்கும். கல்லீரல் நோயைக் குணப்படுத்தும்.

வல்லாரை

வல்லாரை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது, `இது மூளையைச் சுறுசுறுப்பாக்கும், மூளை வளர்ச்சிக்கு உதவும்’ என்பதுதான். வல்லாரைக்கு சைனஸை குணப்படுத்தும் சக்தியும் உண்டு.

வல்லாரையைச் சற்று குறைந்த அளவில் உட்கொள்வது நல்லது. கொள்ளுவை வல்லாரையுடன் சேர்த்து அரைத்து மாவு கலந்து தோசை சுடலாம். இது சிந்தனைத் திறனை அதிகப்படுத்தும். மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும். பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள் சரியாகும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். குடற்புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நோய்களைக் குணப்படுத்த உதவும்.

வெந்தயம்

வெந்தயம் என்றாலே உடல் குளிர்ச்சிதான் நினைவுக்கு வரும். வெந்தயம் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்;  ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

வெந்தயத்தை அரைத்து, மாவுடன் சேர்த்துத் தோசை சுடலாம். வெந்தயத் தோசையை, சதக்குப்பைக் கீரையுடன் சேர்த்து சாப்பிட்டால், மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்றுவலி சரியாகும். மாதவிடாய்ச் சுழற்சியைச் சீராக்கும். கருமுட்டை வளர்ச்சிக்கு உதவும். மூட்டுவலி, வீக்கம் போன்றவற்றைச் சரிசெய்யும்.

வெந்தயம் குளிர்ச்சி, கொள்ளு உஷ்ணம். இவை இரண்டையும் சேர்த்து தோசையாகச் சாப்பிட்டால், கல்லடைப்பு நீங்கும். பித்தப்பையில் உண்டாகும் கற்களை நீக்க உதவும். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.


துத்தி

துத்தியின் இலையைப் பொரியல் செய்து சாப்பிடலாம். இது, மூலத்துக்குச் சிறந்த மருந்து. ஆனால், அதே நேரத்தில் துத்தியைத் தோசையாக செய்து சாப்பிடும்போது, இதன் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நரம்புகள் நீக்கப்பட்ட துத்தி இலையை மாவுடன் கலந்து, தோசையாகச் சுடலாம்.

துத்தி இலை தோசையை வாரம் இரண்டு முறை சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மூலநோய் குணமடையும். சிறுநீர் எரிச்சல், செரிமானக் கோளாறு போன்றவற்றைச் சரிசெய்யும். உடல் தசைகள் வலுப்பெற உதவும்.

மூக்கிரட்டை கீரை

மூக்கிரட்டைக் கீரையில் பல வகையான வேதிப்பொருள்கள் உள்ளன. `இவை இனப்பெருக்க உறுப்புகள், ஜீரண உறுப்புகள், சுவாச உறுப்புகள், சிறுநீரகம் ஆகியவற்றைக் காக்கும். கல்லீரலை பலப்படுத்தும். அது தொடர்பான மஞ்சள்காமாலையைத் தடுக்கும். இதயத்தைப் பாதுகாக்கும். இதயத்தில் ஏற்படும் கோளாறுகளைக் குறைக்கும்.  உடல் உள்ளுறுப்புகளின் புற்றுநோய்க்கு மருந்தாகும்’ என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பொதுவாக மூக்கிரட்டை கீரையைப் பொரியலாகவும் ரசமாகவும் சாப்பிடுவார்கள்.  மூக்கிரட்டைக் கீரையை தோசையாகவும் சாப்பிடலாம். சாதாரண தோசை அளவில் இதைச் சாப்பிட முடியாது. ஆகையால் சிறிய அளவில் செய்து சாப்பிடுவது நல்லது. சிறுநீரைச் சீராக வெளியேற்றும். சிறுநீரக அடைப்பைச் சரிசெய்ய உதவும். ரத்த உற்பத்திக்கு உதவும். ரத்தச்சோகையைச் சரிசெய்யும். சளி மற்றும் கோழையைக் கரைத்து, சிறுநீருடன் வெளியேற்றும். ரத்தச்சோகை மற்றும் ஆஸ்துமாவுக்கு சிறந்த மருந்தாகும்.

கீழாநெல்லி

இது, நீர் நிறைந்த இடங்களில் வளரக்கூடியது. மஞ்சள்காமாலைக்குப் பரிந்துரைக்கப்படும் கீழாநெல்லி, கல்லீரல் நோய்க்கும் சிறந்த மருந்தாகும். கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்தில் மூன்று முறை இதை உட்கொள்ளலாம். கல்லீரலில் உள்ள மாசுக்களை நீக்கும்.

கீழாநெல்லி இலைகளை அப்படியே அல்லது சாறாக மாவுடன் கலந்து தோசையாக ஊற்றிச் சாப்பிடலாம். பார்வைத்திறனை மேம்படுத்தும். சிறுநீரைப் பெருக்கும். ரத்த உற்பத்தியை அதிகரிக்கும். அதிகமாக மது அருந்துபவர்கள் கீழாநெல்லி தோசையை வாரம் இரண்டு முறை சாப்பிட்டால் கல்லீரலைக் காக்கலாம். சருமத்தில் ஏற்படும் வெண் புள்ளிகளைச் சரிசெய்யும்.


கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணி என்றாலே கூந்தல் பராமரிப்புதான் முதலில் நம் கண் முன் வந்து நிற்கும். கரிசலாங்கண்ணி ரத்தத்தைச் சுத்தம் செய்து, ரத்த உற்பத்திக்கு உதவும். சருமப் பிரச்னைகளைச் சரிசெய்யும்.

கரிசலாங்கண்ணியை துவையலாகவும் கூட்டாகவும் செய்வார்கள். கரிசலாங்கண்ணியை அரைத்து சாறு எடுத்து அதை தோசை மாவுடன் சேர்த்துச் சாப்பிடலாம். கண்ணுக்குக் குளிர்ச்சி தரும். கல்லீரலுக்குச் சிறந்த உணவு. கல்லீரலை வலுப்படுத்தும். உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, அழகான உடலமைப்பைப் பெற உதவும். மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் அதிகக் குருதிப் போக்கைக் கட்டுப்படுத்தும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad