Type Here to Get Search Results !

நெருப்பு மனிதனை காதலிக்கும் கல்லூரி மாணவி! நெருப்புடா ஸ்டோரி

முதல் படமே முத்தாய்ப்பான படமாக ஒரு ஹீரோவுக்கு அமைவது மிகவும் அரிது. நடிகர் திலகத்துக்கு பராசக்தி அமைந்ததைப்போல, அவரது பேரன் விக்ரம் பிரபுவுக்கும் கும்கி அமைந்தது. நடிக்க வந்ததில் இருந்தே எனர்ஜிலெவல் கொஞ்சமும் குறையாமல் நடித்துக்கொண்டிருப்பவர் விக்ரம் பிரபு. லேட்டஸ்டாக நெருப்புடாவில் நடிப்பில் கொளுத்தியிருக்கிறாராம். படத்தின் இயக்குநர் அசோக்குமார் டப்பிங் வேலைகளுக்காக பைக்கை ஸ்டார்ட் செய்த நிலையில், பேட்டி என்று எதிர்ப்பட்டோம். கொஞ்சமும் தயங்காமல், ஜூஸ் கடைக்கு போலாமா? என்று உபசரித்தார். ஜூஸ் குடித்துக் கொண்டே அவரிடம் பேசினோம்.



கொளுத்துற வெயில்லே நெருப்புடான்னு என்னங்க டைட்டிலு?

ஹவுஸிங் போர்டில் இருக்கும் ஐந்து நண்பர்கள் தீயணைப்புத் துறை வேலைக்கு சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அவர்களுடைய அந்த லட்சியத்தை காதல், காமெடி, எமோஷனல் என ஜாலியான கலவையில் சொல்லியுள்ளேன். படத்தில் சோஷியல் எலிமென்ட்ஸும் இருக்கு. அது எப்படி ஒர்க் அவுட்டாகிறது என்பது ரிலீஸுக்குப் பிறகுதான் தெரியும். இந்தப் படத்தில் கதைக்களம்,  கேரக்டர்ஸ் என எல்லாத்தையும் உல்டாவா பண்ணியிருக்கிறேன். அதுதான் இந்தப் படத்தோட ஸ்பெஷல். வழக்கமா நீங்க நினைக்கிற எதுவும் இருக்காது.

விக்ரம் பிரபு?

ஃபயர்மேனா வர்றார். ஃபயர்மேனுக்குரிய உடல்வாகு அவரிடம் பக்காவா இருந்ததால் என்னுடைய முழுமுதல் சாய்ஸ் அவராகத்தான் இருந்தார். அந்த யூனிஃபார்மை போட்டதும் கச்சிதமாக இருந்தார். அந்த உடையில் அவரிடம் ஒரு மிடுக்கைப் பார்க்கலாம். அந்தளவுக்கு ஃபயர்மேன் கேரக்டருக்கு  பொருந்தியிருக்கிறார். விக்ரம் பிரபுவின் டெடிகேஷன் எனக்கு மலைப்பாக இருந்தது. நெருப்பு என்றாலே கஷ்டம்தான்.  ஃபயர் சம்பந்தப்பட்ட கதை என்பதால் பெரும்பாலான காட்சிகளில் ரிஸ்க் எடுத்துதான் பண்ணார்.

திடீர் திடீர்னு நெருப்புப் பந்து விழும். ஷாட்ல எரிந்துகொண்டிருக்கும் வீடு எப்போது வேண்டுமானாலும் ஹீரோ மீது விழும் என்ற நிலை இருக்கும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நடிச்சார். நெருப்பு என்பதால் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் வந்துடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக வேலை பார்த்தோம். இந்த ஸ்கிரிப்ட் வேற லெவலுக்கு வரணும் என்று என்னைவிட விக்ரம் பிரபு வெறித்தனமா வேலை பார்த்தார்.

நிக்கி கல்ராணி?

காலேஜ் ஸ்டூடன்ட்டா வர்றாங்க. டாக்டராக வேண்டும் என்பதுதான் அவங்க லட்சியம். விக்ரம் பிரபு மீது நிக்கிக்கு எப்படி காதல் வருகிறது என்பதை சுவாரஸ்யமா சொல்லியிருக்கிறேன்.

நிக்கி கல்ராணியை கிளாமரா பார்க்கத்தானே ரசிகர்கள் விரும்புவார்கள்?

இந்தப் படத்தை அந்தக் கோணத்தில் எடுக்கலை. அவங்களுக்கும் கதையில் முக்கியத்துவம் இருப்பதால் கிளாமர் காட்டுவதற்கு வாய்ப்பே இல்லை. அதுமட்டுமில்ல, இந்த ஸ்கிப்ரிட்டைப் பொறுத்தவரை கிளாமர் தேவைப்படவில்லை. கமர்ஷியல் படமாக இருந்தாலும் யதார்த்தம் கலந்த படமாகவும் இருக்கும். சில நண்பர்கள், கிளாமர் சேர்க்கலாமே என்றார்கள்.  கதைக்கு என்ன தேவையோ அதைத்தான் படமாக்கியிருக்கிறேன். பாடல் காட்சிகளில் நீங்கள் எதிர்பார்க்கிற கிளாமர் இருக்கும். மற்றடி நிக்கி கல்ராணிக்கும் இது வித்தியாசமான படமாகத்தான் இருக்கும்.

படத்துல வேற யாரெல்லாம் நடிக்கிறாங்க?

மொட்டை ராஜேந்திரன் முக்கியமான கேரக்டர்ல வர்றார். வடிவேல் பாடிலேங்வேஜ்ல அவர் பண்ணியிருக்கும் லூட்டி காமெடிக்கு உத்தரவாதமாக இருக்கும். ரிலீஸுக்குப் பிறகு அவருடைய கேரக்டர் ரசிகர்களால் பெரிதும் பேசப்படும். ஆடுகளம் நரேன் போலீஸாக வர்றார். இவர்களோடு நாகி நீடு, பொன்வண்ணன் ஆகியோரும் இருக்காங்க. படத்துல வர்ற எல்லா ஆர்ட்டிஸ்ட்டும் அவங் கவங்க போர்ஷனை சிறப்பா பண்ணியிருக்காங்க.

நீங்களே ஒளிப்பதிவாளராக இருக்கும்போது வேறு ஒருத்தரை அழைக்க காரணம்?

இது விஷுவலுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படம். இதுவரை வெளிவந்த படங்களில் ஹவுசிங் போர்டு லொகேஷனை சிம்பிளா காட்டியிருப்பாங்க. நான் அதை அப்படியே உல்டாவா பண்ண ஆசைப்பட்டேன். ஹவுஸிங் போர்டை கலர்ஃபுல்லா காட்டினா எப்படி யிருக்கும்னு யோசிச்சேன்.  அதுக்காகவே இந்த ஸ்கிரிப்டுக்கு சிறந்த கேமராமேன் தேவைப்பட்டார். என்னைப் பொறுத்தவரை எப்போதும் ஒரு விஷயத்துல கவனம் செலுத்தினால் போதும் என்று நினைப்பேன். இந்த ஜானர் தெரியாத ஒருவர் கேமராமேனா கிடைத்தால் நல்லா இருக்கும்னு நினைச்சேன்.  அதற்கு ஆர்.டி.ராஜசேகர்தான் செட்டானார். ஏன்னா, ஆர்.டி சார் இதுவரை அப்படியொரு ஜானரில் படம் பண்ணாதது எனக்கு ப்ளஸ்ஸாக இருந்தது. ஹவுஸிங் போர்டு ஏரியாவை தாஜ்மகால் கணக்கா ரொம்ப அழகா காட்டியிருக்கிறார்.

இசை?

இப்ப ஷான் ரோல்டன்தான் கோடம்பாக்கத்தில் மோஸ்ட் வாண்டட் லிஸ்ட்ல இருக்கார். அவருடைய இசையைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியுமோ அதே போல் அவர் குணத்தைப் பற்றியும் சொல்லலாம். அமேசிங் பெர்சன். எல்லோரிடமும் ஃப்ரெண்ட்லியா பழகுவார். முதன் முறை அவரை சந்தித்தபோதே அவரை எனக்குப் பிடித்திருந்தது. அதுக்குக் காரணம் அவருடைய அப்ரோச். பிறகுதான் கதையே சொன்னேன். சஸ்பென்ஸ், த்ரில்லர்  கலந்த  இந்தக் கதையில் ஷான் ரோல்டனின் இசைக்கு முக்கிய பங்கு இருக்கு.

விக்ரம் பிரபுவே இந்தப் படத்தை தயாரிக்குமளவுக்கு இந்தப் படத்துல அப்படி என்ன இருக்கு?

சிவாஜி சார் குடும்பத்தில் அவ்வளவு சீக்கிரமாகக் கதையை செலக்ட் பண்ணமாட்டாங்க. கதையில் பொழுதுபோக்கு அம்சங்கள், சமூக சிந்தனை என்று நிறைய விஷயங்களை எதிர்பார்ப்பார்கள். விக்ரம் பிரபு இந்தப் படத்தை தயாரிக்க என்ன காரணம் என்பதை நான் சொன்னால் அது சரியாக இருக்காது. படம் பார்க்கும் போது என்னை ஏன் செலக்ட் பண்ணினார் என்ற அவருடைய முடிவுக்கு நீங்களும் லைக்ஸ் கொடுப்பீங்க. இந்த மாதிரி கதையை நிறைய ஹீரோஸ் கமிட்பண்ணமாட்டாங்க. விக்ரம் பிரபு கதையை கதையாக மட்டும் பார்த்தார். அதுவே எனக்கு சந்தோஷமாக இருந்தது. விக்ரம் பிரபு எப்போதும் பரந்த மனப்பான்மை கொண்டவர். ஒரு தயாரிப்பாளரா கேட்ட விஷயங்களை எல்லாம் செய்து கொடுத்தார்.

உங்களைப் பற்றி சொல்லுங்கள்?

நானும் பத்திரிகையாளன்தான். சி.என்.என். என்ற தொலைக்காட்சியில் கேமராமேனாக எட்டு வருடங்கள் வேலை பார்த்தேன். பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மனிடம் இரண்டு படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக வேலைபார்த்தேன். மீடியாவுல இருக்கும்போதே வாய்ப்பு தேடினேன். யாரும் கொடுக்கலை. ஒரு படம் பண்ணினால்தான் நம்மை மதிப்பாங்க என்பதை லேட்டாத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். ரோமியோ ஜூலியட் படத்தில் அசோசியேட் டைரக்டரா வேலை பார்க்க வாய்ப்பு கிடைச்சது. அந்தப் படத்துக்குப் பிறகு விக்ரம் பிரபுவிடம் கதை சொல்லி இந்தப் படத்தை ஓ.கே.பண்ணினேன். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad